"நினைவில் வைத்துக் கொள்" என்றோ ஒரு நாள் வெள்ளைக்காரன் இந்த நாட்டைவிட்டுப் போய்விடுவான். ஆனால் அவர்களின் பிள்ளைகளைப் போன்று இருபதனாயிரம், முப்பதனாயிரம் கறுப்பு வெள்ளையர்களை உருவாக்கிவிட்டுத்தான் அவர்கள் வெளியேறுவார்கள். அதன் பிறகு இந்த நாட்டை ஆளப்போவது அந்தக் கறுப்பு வெள்ளையர்கள் தான். அவர்கள் சிங்கள மொழியையும் சிங்களப் பண்பாட்டையும் வெறுப்பார்கள். இன, மத, மொழி வேறுபாடு தேவையில்லையென அவர்கள் உஙக்ளுக்குப் போதிப்பார்கள். மரக்கலக் ஹம்பியாக்களும் தமிழர்களும் கொச்சிகளும் போறகாரன்கள் என எல்லோரும் ஒன்றே என்பார்கள். இந்த நாடு இவர்கள் அனைவருக்கும் உரியது என்பார்கள். விகாரைகளைச் சுற்றி தேவாலயங்களையும், சைவக் கோவில்களையும், மசூதிகளையும் கட்டுவார்கள். இப்படிக் கூறி ஆங்கிலத்திலேயே அதிகாரம் செலுத்துவார்கள். உங்களுக்காக உங்களை விடுவிக்கும் ராஜகுமாரர்கள் பிறக்கும்வரை நீங்கள் காத்திருப்பீர்கள். ஆனால் அந்த இராஜகுமாரர்களை கருவிலேயே அழித்துவிட அந்தக் கறுப்பு வெள்ளையர்களால் முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எமது பிள்ளைகளுக்கு அவர்கள் போதை மாத்திரைகளை கொடுத்துவிடுவார்கள். அதன் பின் எங்கள் பிள்ளைகள் கொட்டையுள்ள வாழைப்பழங்களை விழுங்கிவிட்டு மலம் கழிக்க முடியாமல் முக்கிக்கொண்டிருக்கும் குரங்குகளைப் போல் ஆக வேண்டிவரும்”
இவை சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் முன்னோடி என்றும் இலங்கைப் பௌத்தர்களின் ஞானத்தந்தை என்றும் போற்றப்படும் அநகாரிக தர்மபால 1931ஆம் ஆண்டு தனது நாட்குறிப்பில் எழுதிய கொடிய விஷத் தன்மை கலந்த வார்த்தைகள்.
ஐரோப்பியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்ததும் இந்த மண்ணின் மக்களாகிய சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்துச் சுதேசிகளையும் அடிமை கொண்டது உண்மை. எனவே ஆங்கிலேயர்களை எதிர்ப்பதும், அவர்களிடம் இருந்து விடுதலை பெறப்போராடுவதும் நியாயமானது என்பது மட்டுமல்ல; அவசியமானதும் கூட.
ஆனால், அநகாரிக தர்மபால தமிழர்களையும், முஸ்லிம்களையும், பறங்கியரையும் கூட ஆங்கிலேயருக்குச் சமனான எதிரிகளாகவே பார்க்கிறார். அதாவது நாட்டை ஆக்கிரமித்திருக்கும் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் சிங்களவர்களுடன் ஐக்கியப்படுத்தப்படவேண்டிய சக்திகளே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் ஆகியோர். ஆனால் இவரோ சிறுபான்மை இன மக்களையும் எதிரிகளாகவே பார்க்கிறார்.
எனவேதான் இவரது கொள்கை தேசியம் என்ற வட்டத்தைக் கடந்து ஏனைய இனங்களின் மேல் வெறுப்பையும் மேலாதிக்கப் போக்கையும் காட்டும் பெரும் தேசியவாதம் என்ற சிந்தனைப் போக்கில் நிலைத்திருப்பதை எம்மால் அவதானிக்க முடியும்.
எனவே தமிழர்களின் தோலில் செருப்பு தைப்பேன் என முழங்கிய கே.எம்.பி.ராஜரத்தின, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனச் சொல்லி ஒரு இன அழிப்புக்கலவரத்துக்கு ஆதரவு வழங்கியபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சிறில் மத்யூ, லலித் அத்துலத்முதலி, ராஜபக்ஷ குடும்பம், எல்லாவல்ல மெத்தானந்த தேரர், இனவாத பொது அமைப்புக்கள், ஞானசார தேரர், அத்துரலிய ரத்தின தேரர் எனப் பல தரப்பினரும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்வைக்கும் இனவாதக் கருத்துக்களும், இன மோதல்ப் போக்கும் இன அழிப்பை நியாயப்படுத்தும் கொள்கைகளும் அப்படி ஒன்றும் புதியவை அல்ல; ஏற்கனவே இருந்த சிங்கள இன மேலாதிக்கப் போக்கு அநாகரிக தர்மபாலவினால் முன்வைக்கப்பட்டது. 1915ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களுக்கும் தத்துவார்த்தத் தன்மையை அநகாரிக தர்மபால வழங்கினார் என்றால் அது மிகையாகாது.
சில தீவிரவாத பௌத்த அமைப்புக்கள் இறைச்சிக்காக மாடுவெட்டுவதை தடைசெய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியதை நாமறிவோம். மாடுவெட்டுவதை எதிர்த்து ஒரு தேரர் தன்னைத் தானே தீ மூட்டிக் கொண்டதும் நினைவிருக்கலாம். களனிப் பிரதேசத்தை மாட்டிறைச்சி இல்லாத புனிதப் பிரதேசமாக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முன்னெடுத்த அட்டகாசப் போராட்டத்தை மறந்துவிட முடியாது. இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அராஜக நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது.
இது அப்படி ஒன்றும் புதிதல்ல!
அநகாரிக தர்மபால இப்படி ஒரு பிரசாரத்தை 1911ஆம் ஆண்டு ஆரம்பித்துவைத்தார். அதில் ஒரு வண்டியில் “கள் குடிப்பவன் கேவலமானவன், மாட்டிறைச்சி உண்பவன் இழி சாதியினன்”, என எழுதி நாடு முழுவதும் ஒரு வண்டியில் கொண்டுதிரிந்து அவரின் வழிகாட்டலில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அவர் எப்பொழுதுமே சிங்கள, பௌத்த இனத்தையும், மதத்தையும் பாதுகாப்பதைவிட சிங்களவர்களுக்கு ஏனைய இனங்கள் மீது வெறுப்பை ஊட்டுவதிலேயே கூடுதல் அக்கறை செலுத்தினார்.
அவர் சிங்கள பௌத்த காயாவில் உரையாற்றியபோது,
“ரிக்சா ஓட்டும் தமிழன் சாப்பிட்டுவிட்டு ரிக்சாவில் ஓய்வெடுக்கும் போது பத்திரிகையைச் சத்தம் போட்டு வாசிப்பான். மற்றவர்கள் அனைவரும் காது கொடுத்துக் கேட்கச் செய்துகொண்டிருப்பார்கள். ஆனால் இந்தக் கொழுத்த சிங்கள மாடுகள் இந்த நேரத்தில் என்ன செய்கிறார்கள்? கள்ளைக் குடித்துவிட்டு சூது விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்டது செமிக்க பின்புறத்தைச் சொறிந்துகொண்டு குறட்டைவிட்டுத் தூங்குவார்கள்” என்றார். தனது மக்களை நேர்வழியில் அறிவுரை சொல்லித் திருத்துவதற்குப் பதிலாக இன்னொரு இனத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் பாணியைக் கையாள்வதை அவதானிக்கலாம். ஒரு இனம் இன்னொரு இனத்தில் பொறாமைப்பட்டு அதன் மேல் வெறுப்புக் கொள்ளும் நிலையையே இப்படியான வார்த்தைகள் ஏற்படுத்தும்.
இன்றைய சிங்கள அரசியல் தலைவர்கள் இவரை சிங்கள இனத்தின் வழிகாட்டி என்றும் பௌத்தர்களின் ஞானத் தந்தை என்றும் தூக்கித் தலையில் வைத்தாலும் உண்மையிலேயே பௌத்த மறு மலர்ச்சிக்கு வித்திட்டவர் ஒரு அமெரிக்க ஆங்கிலேயர் அவர் தான் ஒல்கொட். இன்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதி ஒல்கொட் மாவத்தை என்றே அழைக்கப்படுகிறது.
அநகாரிக தர்மபால செய்ததெல்லாம் பௌத்த சிங்கள மறுமலர்ச்சியை ஏனைய இனங்களுக்கும், மதங்களுக்கும் எதிரான வெறுப்புணர்வாகவும், பொறாமையுணர்வாகவும் மாற்றியது தான். அது மட்டுமன்றி ஒல்கொட் ஐ துரோகி எனப் பட்டம் சூட்டியதை அடுத்து அவர் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார்.
இத்தனைக்கும் அநகாரிக தர்மபால பிறப்பால் ஒரு பௌத்தர் அல்ல. இவர் ஒரு கத்தோலிக்கர். இவருக்கு கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் சூட்டப்பட்ட பெயர் டொன் டேவிட். இவரின் தந்தை கொவிக சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் துராஜ சமூகத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர். இவர்கள் தென்னிலங்கையிலிருந்து வந்து கொழும்பில் குடியேறி ஒரு மரத்தளபாடத் தொழிற்சாலையை அமைத்து அங்கேயே தங்கிவிட்டனர்.
1883 இல் கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக ஒரு கலவரம் இடம்பெறுகிறது. அதில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்படுகிறார். அப்போது பிரம்ம ஞான சங்கத்தின் மூலம் பௌத்தத்தின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட்ட வெள்ளையரான ஒல்கொட் இக் கலவரம் பற்றி ஆராய 1884 இல் வருகிறார். அவர் பௌத்தர்களுக்கு நியாயம் கோரி வாதாடி வெற்றி பெற்றுக்கொடுக்கிறார். அதன் காரணமாக பௌத்தர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனியான கௌரவம் வழங்கப்படுகிறது.
அக்காலப் பகுதியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார் டொன் டேவிட். அப்போது கல்லூரியை விட்டு வெளியேறிய டொன்பிலிப் தான் பிரமஞான சங்கத்தில் சேர்வதற்கான தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். ஒல்கொட், பிரமஞான சங்கத்தின் இலங்கைக் கிளையின் அடுத்த தலைவர் லெப்.பீட்டர் ஆகியோரின் உரைகளையும் கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார். 1884இல் சென்னை அடையாற்றிலுள்ள பிரமஞான சங்கத்தின் தலைமையகம் சென்று டொன். டேவிட் அங்கு பாளி மொழியைக் கற்கிறார். 12.02.1886இல் அவர் பௌத்த மதத்துக்கு மாறி தனது பெயரை தர்மபால ஹேவ விதாரண என மாற்றிக்கொள்கிறார். ஒரு கத்தோலிக்கராகப் பிறந்து கத்தோலிக்கராக வாழ்ந்த அவர் தனது 22ஆவது வயதிலேயே ஒரு பௌத்தராக மாறுகிறார்.
அதையடுத்து இவர் தீவிர பௌத்த மத பிரசாரத்தில் இறங்கினார். பௌத்த பத்திரிகைகள் வெளியிடுவதில் தீவிரமாக ஈடுபட்டதுடன் பௌத்த பாடசாலையின் முகாமையாளராகவும் செயற்பட்டார். பின்பு பிரம்மஞான சங்கத்தின் பௌத்த பிரிவின் செயலாளராகவும் பௌத்த பாதுகாப்பு அமைப்பின் இணைச் செயலாளராகவும் செயற்பட்டார். இக்காலப் பகுதியில் அவரின் பிரசாரங்கள் பௌத்தத்தை வளர்ப்பது என்ற எல்லையைக் கடந்து தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான துவேஷப் பரப்புரைகளாக மேலெழுந்தன.
1906இல் சிங்கள பௌத்தம் என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்படுகிறது. இது அப்பட்டமான இனவாத பிரசாரத்தை மேற்கொள்கிறது. இதன் ஆசிரியராக ஆரம்பத்தில் பியதாஸ சிறிசேன என்பவர் செயற்பட்டார். பின்பு அதன் தலைமை ஆசிரியராக அநகாரிக தர்மபால பொறுப்பேற்ற பின்பு அப் பத்திரிகை படுமோசமான இனவெறியைக் கட்டவிழ்த்துவிடுகிறது.
கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களிலும் வர்த்தகத்திலும் ஏற்றுமதி இறக்குமதித் துறையிலும் ஆதிக்கம் செலுத்திவந்த முஸ்லிம்களை இலக்குவைத்து படுமோசமான இனவெறிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது,
சிங்களவர்களுக்குரிய இலங்கையின் வர்த்தகத்தை சோனகர்களும், தமிழர்களும் மலையாளிகளும் கைப்பற்றிவிட்டனர் எனப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பலனாக 1915 முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் இன அழிப்புக் கலவரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதில் கொழும்பில் மட்டும் 38 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். மூவாயிரம் வர்த்தக நிலையங்கள் உட்பட தொழில் நிலையங்கள் நிர்மூலமாக்கப்படுகின்றன. ஏராளமான வீடுகள் அழிக்கப்படுகின்றன.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பிரிட்டிஷ் அரசாங்கம் “மார்ஷல் லோ” என்ற கண்டவுடன் சுடும் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவருகிறது.
இதில் ஒரு சிங்களப் பெரும் வர்த்தகர்களின் இரு மகன்மார் உட்பட வீதிகளில் இறங்கி கலவரங்களில் இறங்கிய சிலர் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். டி.எஸ்.செனநாயக்க, எம்.ஆர்.செனநாயக்கா, பரன் ஜயதிலக, ஏ.க.குணசிங்க போன்ற சிங்களத் தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அநகாரிக தர்மபால இனவாதப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்.
இலங்கையில் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்த சொலமன் வெஸ்ட் டயஸ் பண்டாரநாயக்க, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று பிரகடனம் செய்து இன அழிப்பை தூண்டியவருமான யூனியர் ரிச்சேட் ஜெயவர்த்தனா ஆகியோரும் டொன்டேவிட்டாக இருந்து பௌத்த தர்மபால ஹேமவிதாரணவாய் மாறியதைப் போல கிறிஸ்தவர்களாயிருந்து, பௌத்தர்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பௌத்த சிங்கள தேசியம் என்றால் அது ஏனைய இனத்தவர்களையும் மதத்தவர்களையும் வன்முறைகள் மூலம் அழித்து அடக்கி அடிமைகொள்வது என்ற கொள்கை இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அநகாரிக தர்மபால போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது தான் நாம் அறியவேண்டிய உண்மை.
எனவே இனவாத அரசியலை முன்வைத்து ஏனைய இனங்களை அடிமைகளாகக் கருதும் பேரினவாதப் போக்கினை மூலதனமாகக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் அரசியல்வாதிகள் அநகாரிக தர்மபாலவை தமது ஞானத் தந்தையாகப் போற்றுவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்
Category: செய்திகள், சிறப்பு கட்டுரை
Tags: